"மனித வணக்கம்" சொன்ன நம்ம கமலை பாராட்டணும்...


"மனித வணக்கம்"
*******************************
தாயே, என் தாயே!
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்
மானசீகச் சக்களத்தி, சரண்.

தகப்பா, ஓ தகப்பா!
நீ என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு

தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடி போனாயோ?

மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை.

மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண சௌகர்யமே, வாழ்!

மகளே, ஓ மகளே!
நீயும் என் காதலியே
எனதம்மை போல..
எனைபிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை,
காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தியுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்.

மதமென்றும், குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகி விடும்
நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!
என் சமகால சகவாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத்தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.
ஆம்,
நாளை உன் வரியில் நான் தெரிவேன்.

அன்பன்
-கமல்ஹாசன்


கவிஞர் புவியரசுக்கு நடந்த பாராட்டு விழாவில்,கமல் மேடையில் வாசித்த அவருடைய கவிதை தான் இது....

இதை வாசிக்கும் போது ஏதோ ஒரு ஆழுணர்வு என் மனதில் ஆழுமை கொண்டது...
வாழ்க்கை ஏன் எதற்கு என்பது எப்படி என்பதை ஒருபுறம் தள்ளிவிட்டு....

எங்கே எப்படி தொடங்கி ....
எத்துனை உறவுகளில் உறைந்து...
உலன்று...
சுழன்று...
சூழ்கொண்டு,,,
சுடர்விட்டு...
பூத்து...
காய்த்து..
கணிந்து...
வெடித்து.....
வளர்ந்து....
மீண்டும் ஒரு சுழலர்ச்சிக்கு வித்திடுகிறது....

அதற்குள்...
நமை வாழ்வித்த...
வாழ்வை தந்த...
நம் வாழ்வாய் மாறிப்போன..
உறவுகள்...
தகப்பன் தாயில் தொடங்கி தீயிலோ... மண்ணிலோ....
தேகம் சேர்ந்து ஐக்கியம் ஆகும்வரை...

ஒலி ஒளி அசைவுடன் உடன்வரும் ஒவ்வொரு உறவுகளையும் ஓசையின்றி யோசித்து பார்க்க நேசித்து போற்ற நெஞ்சம் விளைகிறது...

ஆகவே ஆதி லெமூரிய கண்டத்தில் வாழ்ந்த என் முதல் ஔவையின் மூலம் சொந்தம் ஆன என் இரத்த சொந்தங்களே... பூமிப்பந்தின் எம்மூலையில் வாழ்ந்தாழும்... இதோ என்மூளையில் இப்போது....

மௌனமாகிறேன்....
உங்களை என் மனதில் கான...